கைதிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை பேச்சு வழக்கில் பிடிவாரண்ட் திடீர் ரத்து.. என்ன காரணம்!
DMK Former Minister Ponmudi Arrest Warrant Cancelled: சைவ, வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்டை சென்னை ஜார்ஜ் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அவர், நீதிமன்றத்தில் ஆஜரானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி 2025- ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசி இருந்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 2- ஆம் தேதிக்குள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
இந்த வழக்கு தொடர்பாக தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 6 மாதத்தில் முடிக்குமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாரர் உமா ஆனந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை மீதான தடை நீக்கம் செய்திருப்பதாகவும், 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!




பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு
அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்முடி ஆஜராவதில் இருந்து விலகளிக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 2- ஆம் தேதிக்குள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இன்றைய தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
கைதில் இருந்து தப்பிய பொன்முடி
இந்த நிலையில், சைவ, வைணவ சமயம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜரான காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!