அமைச்சர் ராஜ்மோகன் எத்தனை அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Nainar Nagendran Criticized Rajmohan: தமிழகத்தில் எத்தனை அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அது தொடர்பான அறிக்கையை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் எத்தனை அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழ் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் இலட்சக்கணக்கில் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் இன்றி கடந்த சில நாட்களாகவே திருப்பூர், கோவை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது பெரும் வருத்தம் அளிக்கிறது.
எத்தனை பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்
அரசு தொடக்கப் பள்ளிகளில் சரிந்த மாணவர் சேர்க்கைகள் ஒட்டுமொத்த தமிழக அரசு பள்ளிகளின் மாணவர்கள் விகிதத்தையும் பாதித்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தற்போது வரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!




அமைச்சரின் ஆய்வு குறித்த விவரத்தை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்
அவற்றின் தரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பன குறித்த விரிவான அறிக்கையை ஆதாரங்களுடன் பொது மக்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் போலவே, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்யக்கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். இது மட்டும் இன்றி மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக அரசு பள்ளிகள் மூடப்படுகிறது.
தனியார் பள்ளிகளை நாடும் ஏழை, எளிய பெற்றோர்கள்
இந்த நிலையில், ஏழை, எளிய பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே நாடும் நிலை உள்ளது. இதன் காரணமாக, வேலை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சொல்லொண்ணா நிதிச் சுமையில் தள்ளப்படுகின்றன என்பதை முதல் அமைச்சர் விஜய் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து தரமான கல்வி கிடைப்பதையும், அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கைகள் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னை குற்றப்பிரிவில் அதிரடி திருப்பம்.. டிஐஜி வருண்குமார் திடீர் பணியிட மாற்றம்!