அதிமுக டூ தவெக.. தகுதிநீக்க நோட்டீஸ்.. சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏக்கள் பரபரப்பு விளக்கம்!
Aiadmk Former MLA : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் 2- ஆவது முறையாக விளக்கம் அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களான மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் ஆகிய 3 பேர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இவரை தொடர்ந்து, விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
மீண்டும் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
இந்த நிலையில், எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து சபாநாயகர் ஜே. சி.டி. பிரபாகர் மேற்கண்ட எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு அந்த எம்எல்ஏக்கள் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில், அந்த விளக்கத்தில் சில சந்தேகங்கள் இருப்பதால் மீண்டும் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலுக்கான லாபம்.. திரை கவர்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையா? கொதித்தெழுந்த சீமான்!




2- ஆவது முறையாக எம்எல்ஏக்கள் விளக்கம்
அதன்படி, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று வியாழக்கிழமை( ஜூலை 9- ஆம் தேதி) தலைமை செயலகத்தில் சபாநாயகர் பிரபாகரை 2- ஆவது முறையாக நேரில் சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தனர். இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த எம்எல்ஏ
இந்த வழக்கு விசாரணையின் போது, அம்பாசமுத்திரம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆஜராகி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அதற்கான விளக்கத்தை அளித்திருந்தார். அத்துடன், சட்டப்பேரவை தலைவரிடமும் தனது விளக்கத்தை முன் வைத்திருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட 3 எம்எல்ஏக்களும் மீண்டும் சபாநாயகரிடம் எம்எல்ஏ பதவி ராஜினாமா தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் – என்ன நடந்தது?