தவெக சமூக நீதி மாற்றத்துக்கான அரசல்ல.. பெயர் மாற்றத்துக்கான அரசு.. டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்!
TKS Elangovan Criticized TVK Government: திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களை தமிழக வெற்றிக் கழக அரசு பெயர் மாற்றம் செய்து வருவதாகவும், இது மாற்றத்துக்கான அரசில்லை. பெயர் மாற்றத்துக்கான அரசு என டிகேஎஸ். இளங்கோவன் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் சமூக நீதி அரசு என கூறிவிட்டு திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி வரும் அரசாக தவெக இருப்பதாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முதல்வர் ஜோசப் விஜய் கரூர் செல்லக்கூடாது என்று எந்த இடத்திலும் திமுக கூறவில்லை. திமுக அளித்த மனுவில் ஒரு வரி, ஒரு வார்த்தை கூட அவ்வாறு இல்லை. ஜனநாயக நாட்டில் ஒருவர் விரும்பிய இடத்துக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, முதல்வர் ஜோசப் விஜய் கரூர் செல்வதில் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. மாற்றத்திற்கான கட்சி என கூறிவிட்டு வெறும் திட்டத்தின் பெயர்கள் மாற்றத்துக்கான கட்சியாக ஆட்சிக்கு வந்துள்ளார்கள். திமுக அரசு அறிவித்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாததால் இன்று விவசாயிகள் வீடுகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
சமூக மாற்றத்துக்கான அரசில்லை தவெக
பல்வேறு தரப்பட்ட மக்களும் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது சமூக மாற்றத்துக்கான அரசு கிடையாது. பெயர் மாற்றத்துக்கான ஆட்சியாகும். மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தில் விடியல் என்ற வார்த்தையை நீக்கி உள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் பெயரை திறன்மிகு தமிழ்நாடு என மாற்றியுள்ளனர். தற்போது உள்ள திட்டங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினால் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகும்.
மேலும் படிக்க: கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி – நாளை வழங்குகிறார் முதல்வர் விஜய்




அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அபாண்டமான குற்றச்சாட்டு
அதன் பெயரை மட்டும் மாற்றி இவர்களுடைய திட்டம் போல காட்டிக் கொள்ளலாம் என கருதுகிறார்களோ என எண்ண தோன்றுகிறது. மேலும், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கரூர் செல்வதை திராவிட முன்னேற்ற கழகத்தினர் தடுக்கின்றனர் என கூறி வருகிறார்கள். எங்களுடைய வழக்கில் எந்த இடத்திலாவது முதல்வர் விஜய் கரூர் செல்லக்கூடாது என இருக்கிறதா என பார்க்க வேண்டும். விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார்.
திமுக நீதிமன்றம் சென்றதற்கு இது தான் காரணம்
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை பயணத்தின் போது, அங்கு கூடியிருந்த மக்களை காவல்துறையை விட்டு கொன்று குவித்தனர் என வீண் பழியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சுமத்தி உள்ளார். அவரது பேச்சுக்கு எதிராக தான் நீதிமன்றம் சென்றோமே தவிர முதல்வர் விஜய் கரூருக்கு செல்லக்கூடாது என ஒரு வரி, ஒரு வார்த்தை கூட நாங்கள் எங்களது மனுவில் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை