கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி – நாளை வழங்குகிறார் முதல்வர் விஜய்
கரூருக்கு ஜூலை 10, 2026 நாளை செல்லும் முதல்வர் விஜய், அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான பணி ஆணை நாளை வழங்கப்படவுள்ளது.
சென்னை, ஜூலை 10 : கரூருக்கு ஜூலை 10, 2026 நாளை செல்லும் முதல்வர் விஜய், அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான பணி ஆணை நாளை வழங்கப்படவுள்ளது.
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி
கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று பரப்புரை மேற்கொள்ள முதல்வர் விஜய் சென்ற போது எதிர்பாராத கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரு மாதத்திற்கு பிறகு சென்னை வரவழைத்து முதல்வர் விஜய் சந்தித்தார். இந்த நிலையில் அவர் முதல்வரான நிலையில் ஜூலை 10, 2026 நாளை முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 32 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கவிருக்கிறார்.




இதையும் படிக்க : தவெகவில் இணைகிறாரா ஓ.பி. ரவீந்திரன்.. ஓ.பி.எஸ்- இன் அடுத்தக்கட்ட அரிசியல் நகர்வு என்ன?
கரூரில் காலணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் முதல்வர் விஜய்
மேலும் கரூருக்கு செல்லும் முதல்வர் விஜய், ரூ.1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கரூர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி.
இதையும் படிக்க : எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்..
அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத்தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.