சென்னை டூ கரூர்.. முதல்வர் ஜோசப் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி – பயண திட்ட விவரம்!
Joseph Vijay Karur Event Details : கரூரில் நாளை நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்பது குறித்த முழு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
கரூரில் தமிழக வெற்றி கழகம் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்குவதற்காக முதல்வர் விஜய் நாளை வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார். அங்கு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், பங்கேற்கும் நபர்களுக்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் கியூஆர் குறியீடு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கரூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்காக விழா மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை டூ திருச்சி தனி விமான பயணம்
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் நாளை வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாக கரூர் சென்றடைகிறார். செல்லும் வழியில், தவெகவினர் சார்பில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரூர்- சேலம் மெயின் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் விஜய் பேசுகிறார்.
மேலும் படிக்க: தவெக சமூக நீதி மாற்றத்துக்கான அரசல்ல.. பெயர் மாற்றத்துக்கான அரசு.. டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்!




கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சி
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயனாளிகளுக்கு அரசு பணிக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதன்படி, பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்- 6 போலீசார் பாதுகாப்பு
மேலும், ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் இல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலமாக சுமார் 13,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி, சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக டூ தவெக.. தகுதிநீக்க நோட்டீஸ்.. சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏக்கள் பரபரப்பு விளக்கம்!