பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை; விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடைபெறும் இடமாக அல்ல; அறிவு, விழிப்புணர்வு மற்றும் சிந்தனையை வளர்க்கும் மையமாகத் திகழ வேண்டும் என்றும், புகழ் பரப்பும் இடமாக அல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் இடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9, 2026: அரசுப் பள்ளி வளாகங்களில் கல்விச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இனிவரும் காலங்களில் தேவையின்றி யாரும் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கல்விக் கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல; அரசியலின் மேடையும் அல்ல. அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பணிக்கான புனித இடங்கள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேவையின்றி பள்ளிகளில் யாரும் நுழைய அனுமதியில்லை:
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல…
அரசியலின் மேடை அல்ல…
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள்… pic.twitter.com/DtNQN26LKm
— Rajmohan (@imrajmohan) July 9, 2026
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசு சாராத நிகழ்வுகள் பள்ளி வளாகங்களில் நடத்த அனுமதி இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாட்டின் வருங்காலத்தையும் வடிவமைக்கும் பொன்னான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சென்னை டூ கரூர்.. முதல்வர் ஜோசப் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி – பயண திட்ட விவரம்!
“அது வெறும் பாட நேரம் அல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையடையும் நேரம், அறிவு பெருகும் நேரம், எதிர்காலம் வடிவமைக்கப்படும் நேரம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் கற்றலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதே முதன்மைப் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடைபெறும் இடம் அல்ல:
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடைபெறும் இடமாக அல்ல; அறிவு, விழிப்புணர்வு மற்றும் சிந்தனையை வளர்க்கும் மையமாகத் திகழ வேண்டும் என்றும், புகழ் பரப்பும் இடமாக அல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் இடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்ட வேண்டும் என்றும், நல்லவற்றைப் படித்து சிறந்து விளங்க வேண்டும் என்றும் அமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.