பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்!
All Farmers Association President PR Pandian : தமிழக அரசு விவசாய பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் 8 அமைச்சர்களுடன் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 7-ஆம் தேதி) சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, பி.ஆர். பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகுபாடின்றி அனைத்து விவசாய பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன்மொழிந்து உள்ளோம். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டப்பேரவையில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று உத்திரவாதத்தை அளித்துள்ளனர். மேகதாது தொடர்பாக கர்நாடக அரசின் கூட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் எந்த கூட்டமும் செல்லுபடி ஆகாது.
தமிழக அரசு- காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மேகதாது அணை பிரச்சனை நிலுவையில் இருந்து வருகிறது. அதற்கான வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய நீர் வழி ஆணையத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது. மத்திய நீர் வழி ஆணையம் கடந்த ஜூன் 28- ஆம் தேதி கர்நாடகா அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. ஒட்டுமொத்தமாக விரிவான வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயார் செய்து மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். அதற்கு அடிப்படை தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே விரிவான வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியும்.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!




அனைத்து கட்சி விவசாய அமைப்புகளுடன் கூட்டம்
இதுவே காவிரி நடுவர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது. மத்திய அரசும் அரசிதழ் வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. கர்நாடக முதல்வரும், பாஜக தலைவரும் மேகதாது அணை கட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதன்படி, அனைத்து கட்சி விவசாய அமைப்புகளை கூட்டி அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொள்ள முதல்வர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுக்க வேண்டும்
இதைத் தொடர்ந்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யா கண்ணு கூறுகையில், குருவை சாகுபடி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், ரூ.1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்க வேண்டும். விவசாய சங்கத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நடவடிக்கை இல்லாமல் உள்ளது. அனைத்து விவசாய சங்கங்களையும் வரவழைத்து உங்களது குறைகள் என்ன என்று அமைச்சர்கள் கேட்டது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!