அறிவிக்கப்படாத மின்வெட்டு – அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு
பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூன் 12 : பயிர்க் கடன் சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்யவும் வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படத மின்வெட்டு இருந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக சார்பில் வருகிற ஜூன் 19, 2026 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிப்பு
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் தவெக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : “திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!
மேலும் அவர் தனது பதிவில், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், “கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50,000த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்” என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.
அதிமுக வெளியிட்ட அறிக்கை
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின்… pic.twitter.com/eyDCBIULYM
— AIADMK (@AIADMKOfficial) June 12, 2026
மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இதையும் படிக்க : “பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் தஇரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.