அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ்!
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் குறித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் சமீபத்திய அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நோட்டிஸ்ற்கு 7 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் 11 : தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க விவகாரம் மற்றும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் குறித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் சமீபத்திய அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மே 13, 2026 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி, 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ்
இந்தச் செயல் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமா?




அதன்படி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார். இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்ததும், அவர்களை மன்னித்து அந்த மனுவை வாபஸ் பெற்றதும் ஆகும். இந்த முடிவை ஏற்று சட்டவிதிகளின்படி நடவடிக்கை கைவிடப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதே சமயம், பதவி விலகிய எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற காலகட்டத்தில், தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நான்கு பேர் மீதான ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான நடைமுறைகள் தற்போது சட்டப்பேரவை விதிகளின்படி நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு உரிய கால அவகாசம் அளித்து, விசாரணை நடத்தப்படும் என்றும், தகுந்த விளக்கம் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் குறி வைத்த மாதம் எது.. முழு விவரம் உள்ளே!
அதிமுகவில் இருந்து விலகி ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நோட்டிஸ்ற்கு 7 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ், இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை முழுமை பெற்ற பிறகே, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவைத் தலைவரின் இந்த நகர்வு தமிழ்நாடு அரசியலில் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.