“ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போடவா சிங்கப்பெண் பிரிவு?”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளர். அதோடு, இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை, ஜுன் 11: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணுக்கு நடந்த அநீதியைக் குறிப்பிட்டுப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுத்துப் போஸ்ட் செய்வதற்காக மட்டும்தான் ‘சிங்கப்பெண்‘ என்ற புதிய பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? என்றும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: “அதிமுகவுடன் அமமுக இணைப்பு?” என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?
முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா?
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உண்மையிலேயே இந்த தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பில் தற்போதைய முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழ்நாட்டுப் பெண்களையெல்லாம் கொதிப்படைய வைத்திருப்பது ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த அநீதியாகும். வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று அந்தப் பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏ சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவரே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்எல்ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர்.
மூடிமறைக்க முயற்சி:
‘தனிமனித ஒழுக்கம்’ பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளைக் கேட்கும்போது நெஞ்சம் கலங்குகிறது, பதறுகிறது என்றுதான் முதலமைச்சர் அவர்கள் பேசி வருகிறார்” என விமர்சித்தார்.
“சிங்கப்பெண்” காவல்படை குறித்து சாடல்:
“உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி…
— Udhay (@Udhaystalin) June 11, 2026
புதிய அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான சிறப்புப் பாதுகாப்புக் காவல் பிரிவான “சிங்கப்பெண்” படைப் பிரிவு குறித்து அவர் காரசாரமாகச் சாடினார். “சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுத்துப் போஸ்ட் செய்வதற்காக மட்டும்தான் ‘சிங்கப்பெண்’ என்ற புதிய பிரிவை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கினாரா? தன் கட்சியைச் சேர்ந்தவர்களே இத்தகைய பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப் பெண்களின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டுவது ஏன்?” என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட்”.. வீரபாண்டியன் அறிவிப்பு
எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்:
தமிழ்நாட்டில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளைக் கட்டுப்படுத்த புதிய அரசு தவறிவிட்டதாகவும், காவல்துறைப் பிரிவுகளை விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் சாடிய அவர், ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளர்.
அதோடு, இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.