டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?
Dengue Fever Vaccine Qdenga : தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு க்யூடெங்கா என்ற தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. சென்னையில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு பரவலாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் செப்டம்பர் 18- ஆம் தேதி வரை சுமார் 2. 10 லட்சம் பேரிடம் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 ஆயிரத்து 830 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை 9 பேர் பலியாகி உள்ளனர். உயிர் கொல்லி நோயான டெங்குவுக்கு தற்போது வரை தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக க்யூடெங்கா தடுப்பூசி
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் முதல் தடுப்பூசியான க்யூடெங்கா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை, ஜப்பானில் சேர்ந்த டகேடா பார்மசூட்டிக்கல்ஸ் மருந்து நிறுவனம் தயாரித்து அதனை பரிசோதனை செய்தது. இதில், முதல் 2 தவணை தடுப்பூசிகளில் டெங்கு பாதிப்பு 90.40 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, க்யூடெங்கா தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காகவும், சந்தைகளில் விற்பனை செய்வதற்காகவும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கியது.
மேலும் படிக்க: சென்னையில் வங்கி ஊழியரிடம் ரூ. 11 லட்சம் வழிப்பறி.. நடுரோட்டில் நடந்த சம்பவம்.. பிரபல ரவுடி உள்பட 4 பேரை தட்டி தூக்கிய தனிப்படை!




இந்தியாவில் டெங்கு தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்
இதற்காக தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் டகேடா நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ரெட்டீஸ் நிறுவனம் ஆகியவை கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி, 2027- ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், பிரிட்டன், மலேசியா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து உள்பட 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியான க்யூடெங்கா பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது மட்டும் இன்றி டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு க்யூடெங்கா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
2.40 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகம்
அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 2.40 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை பெரிதளவில் தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இதனால், காய்ச்சல் தொற்று பாதிப்புக்கு உள்ளான சில நபர்கள் உயிரிழப்பை சந்தித்து வந்தனர். தற்போது, டெங்கு நோய் தடுப்பூசியான க்யூடெங்கா கண்டுபிடிக்கப்பட்டது வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..மாணவிகளிடம் சில்மிஷம்.. திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!