மீண்டும் வெளிநாடு பறக்கும் முதல்வர் விஜய்!.. சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் திட்டம்!!..
CM Vijay Switzerland Visit: லண்டன் பயணத்தை முடித்துத் திரும்பிய தமிழக முதலமைச்சர் விஜய், உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். டாவோஸ் நகரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெளிநாடு செல்லும் முதலமைச்சரின் பயணம் குறித்து விரிவாக வாசியுங்கள்.
தமிழ்நாட்டைப் புதிய தொழில் முதலீடுகளின் மையமாக மாற்றுவதற்கும், உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் லண்டன் நகரிற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டு, சுமார் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் வெற்றிகரமாகத் திரும்பியிருந்தார். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த அண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2027 ஜனவரி 18 முதல் 22 வரை சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
உலக பொருளாதார மன்றக் கூட்டம்:
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான அரசியல் தலைவர்கள், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அலோயிஸ் ஸ்விங்கி மற்றும் மேலாண்மை இயக்குநர் மரூன் கைரூஸ் விடுத்த அழைப்பை ஏற்று, முதலமைச்சர் விஜய் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து பயண எதிர்பார்ப்புகளும்:
கடந்த வாரம் லண்டன் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்குப் விண்வெளி, பாதுகாப்புத் துறை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து ஆலோசித்தார். அதில், ஐரோப்பிய வாகன உதிரிபாக நிறுவனம் தமிழகத்தில் ரூ.3,000 கோடியில் புதிய ஆலை அமைக்க விருப்பக் கடிதம் வழங்கியதும், இந்துஜா குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் கூடுதல் முதலீடுகளை உறுதி செய்ததும் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய குறுகிய இடைவெளியில், மீண்டும் ஒரு முக்கியச் சர்வதேசப் பயணத்திற்குத் தயாராகி வருவது அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பாமக ஆதரவு யாருக்கு.. நெத்திப் பொட்டில் அடித்தது போல அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்!
2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் இலக்கு:
தமிழக அரசு 2036-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் எட்ட வைக்கும் பிரம்மாண்ட இலக்கை நோக்கிப் புதிய தொழிற்கொள்கைகளை வகுத்து வருகிறது. டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், 1,000-க்கும் மேற்பட்ட சர்வதேசக் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த உலகளாவிய மேடையில் தமிழ்நாட்டின் மின்னணுவியல், செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார வாகன உற்பத்திக் கட்டமைப்புகளை எடுத்துரைத்து, உலகளாவிய முன்னணி நிறுவனங்களை நேரடியாக ஈர்க்க முதலமைச்சர் விஜய்யின் இந்த டாவோஸ் பயணம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.