காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி.. போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொடூர கொலை.. மையம் நிர்வாகி உள்பட 5 பேர் அதிரடி கைது!
Kanchipuram Youth Murder Case : காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மறுவாழ்வு மைய உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பேரை சேலையூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
காஞ்சிபுரம் மாவட்டம், சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் விஜிபி நகரில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் ( 39 வயது) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமார் வீடு திரும்பினார். ஆனால், வீட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படும் அருண்குமார் கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி மீண்டும் அதே போதை மறுவாழ்வு மையத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்து விட்டனர். இந்த நிலையில், போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து அருண்குமார் தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்
அப்போது, அவரை தப்பி செல்ல விடாமல் ஊழியர்கள் பிடித்து வைத்ததாகவும், அப்போது அருண்குமார் கத்தி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவரை கட்டி போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், திடீரென அருண்குமார் மயக்கமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: காணாமல் போன பெண் கல்குவாரியில் சடலமாக மீட்பு.. நகை- பணத்துக்காக தீர்த்துக்கட்டிய மருமகன்.. திருப்பத்தூரில் கொடூரம்!




வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சு திணறல்
இது தொடர்பாக அருண்குமாரின் பெற்றோர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சம்பந்தப்பட்ட போதை மறுவாழ்வு மையத்தில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அருண் குமார் கட்டிலில் கட்டி போட்டு, அவரது வாயில் துணிய வைத்து அழுத்தியதன் காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
மறுவாழ்வு மைய ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
இது தொடர்பாக, போதை மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் ( 36 வயது), குணசீலன் ( 43 வயது), அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை ( 40 வயது), ராஜ் கமல் ( 33 வயது) ஆகிய 5 பேரை சேலையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!