முருகன் வடக்கே பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை
திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் தமிழ்கடவுள் முருகனை அடிப்படையாக வைத்து உருவாவதாக கூறப்படும் நிலையில் சீமான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முருகன் வரலாற்றை திரித்து தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 5 : முருகன் வரலாற்றை திரித்து தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் தமிழ் கடவுளான முருகனை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இந்தப் படம் குறித்து பகிர்ந்த தயாரிப்பாளர் நாக வம்சி, கடவுள் முருகனை வட நாட்டில் பிறந்தவர் என குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்ப் பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம் ஒழுங்கு சிக்க ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Priyamani: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!
இது தொடர்பாக அவரது அறிக்கையில், தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி, ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சீமானின் பதிவு
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி “என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர்… pic.twitter.com/1zTIwtooi3
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 5, 2026
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இது.. இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்களே!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



