தவெகவினர் முன் அனுமதி பெறாமல் இதை செய்யக்கூடாது… கட்சி தலைமை போட்ட புதிய ரூல்ஸ்!
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கட்சியினர் பேட்டிகள், விவாதங்களில் பங்கேற்பதற்கு முன்னதாக கட்சி தலைமையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு யூடியூப் சேனல்கள், ஊடக விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று பேட்டி அளித்து வருகின்றனர். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையின் அனுமதி பெறாமல் அவர்கள் இவ்வாறு செயல்பட்டு வருவதாக கட்சியின் தலைமைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அனுமதி பெறாமல் கட்சியின் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும் எந்த விதமான ஊடக விவாதங்களிலும் பங்கேற்க கூடாது. மேலும், பொது இடங்களில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பது உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
தவெக தலைமையிடம் முன் அனுமதி பெற வேண்டும்
இத்தகைய முன் அனுமதியை பெறாமல் எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடக தளங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பதோ அல்லது பேட்டிகள் அளிப்பதோ கூடாது என்பதை கட்சியின் பொதுச் செயலாளரான நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் புஸ்ஸி ஆனந்த தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு ஊடகங்களில் கட்சியினர் மத்தியில் பேட்டிகள், விவாதங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..




சட்டமன்ற தேர்தல் தொடர்பான விவாதம்
இதில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களிடம் தேர்தல் நிலவரம், கட்சிகள் நிலவரம், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும், தங்கள் தொகுதியில் தங்களது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு என்ன மாதிரியான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பன போன்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் தலைமையின் அனுமதி பெறாமல் பங்கேற்று வருகின்றனர்.
தேவையில்லாத விமர்சனங்களுக்கு வழி வகுப்பதை தடுக்க
இந்த விவாதங்களின் போது நெறியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் விமர்சனமாக மாறும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அரசியல் தொடர்பான பொது விவாதங்களில் பங்கேற்பதற்கும், பேட்டி அளிப்பதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!