காஞ்சிபுரம், பிப்ரவரி 23, 2026: பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக தொடங்கியுள்ள “எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” கட்சி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்க்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
தமிழக அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளை ஏறக்குறைய 99 சதவீதம் வரை இறுதி செய்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது.
மேலும் படிக்க: மதுபோதையில் காரை சரமாரியாக ஓட்டிய இளைஞர்.. கமுதி பேருந்து நிலையத்தில் பரபரப்பு..
நாம் தமிழர் கட்சி இந்த முறையும் சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்திக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிவிக்கப்பட்டனர்.
முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க:
தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. ஆலோசனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சி தொடக்க மாநாட்டில் தலைவர் விஜய், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுவரை தமிழக வெற்றி கழகத்துடன் எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் தனித்து களமிறங்க உள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..
இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பரபரப்புகள் நிலவுகின்றன. பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றியவர். அதிமுகவில் முக்கியத் தலைவராகப் பார்க்கப்பட்ட இவர், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது அணியில் இருந்து வந்தார். அண்மையில் அதிலிருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கினார்.
அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு “எம்.ஜி.ஆர். அதிமுக” எனப் பெயரிட்டுள்ளார். கட்சி தொடங்கியபோதே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் எனத் தெளிவாக அறிவித்திருந்தார்.
தவெகவிற்கு ஆதரவளிக்கும் எம்.ஜி.ஆர் அதிமுக:
இந்தக் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு “எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆதரவு அளிக்கும் என அறிவித்தார்.
“ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக விஜய் உறுதியளித்திருப்பதால் அவரை ஆதரிக்கிறோம். வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.