“பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!
TVK Minister Maria Wilson Speech: திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக விமர்சித்த தவெக அமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் பட்டியல் தாக்கல் செய்யப்படும் என்றும் 2029-ல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 27: சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் பாராட்டு விழாவில், திமுக முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர் பாபுவை மறைமுகமாகத் தாக்கிப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான மரிய வில்சன். தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றளிக்கும் விழா சென்னை துறைமுகத் தொகுதியில் நடைபெற்றது. முதன்முறையாக இத்தொகுதியில் தவெக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் மரிய வில்சன் உரையாற்றினார்.
இதையும் படிக்க: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!
“பார்ட்டி ஃபண்ட் தெரியாத மாதிரி நடிப்பு”:
நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சேகர் பாபுவை நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார். பார்ட்டி ஃபண்ட் என்றால் என்னவென்றே தெரியாதது போல சிலர் வெளியில் நடமாடுகிறார்கள். ‘அப்படினா என்னது? பார்ட்டி ஃபண்ட்னா என்ன?’ என்று விசித்திரமாகக் கேட்டுக்கொண்டு வருகிறார் இந்தத் தொகுதியில் ஜெயிச்சவர் (சேகர் பாபு). அவருக்கு இந்த மேடை வாயிலாக நான் ஒன்றை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். “வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் பிரத்யேக அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தனி ஆடிட்டிங் அறிக்கை:
துறைமுகம் தொகுதி சார்ந்த நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்த தனிப்பட்ட நிதி தணிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆடிட்டிங் ஃபைல் வரும் சட்டமன்றப் பேரவை செஷனில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும். அப்போது தெரியும் ஊழல் பட்டியல்: “அந்தத் தனி அறிக்கையை நாங்கள் பேரவையில் தாக்கல் செய்யும் அன்று உங்களுக்குத் தெரியும், அங்கே என்ன நடக்கப்போகிறது; அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்று!” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
2029-ல் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்:
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி முறை குறித்து உரையாற்றிய மரிய வில்சன், தேசிய அளவிலான நீட் தேர்வு ரத்து குறித்து தவெகவின் முக்கியத் திட்டத்தையும் வெளிப்படுத்தினார். “இங்கு அமர்ந்திருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். தமிழ்நாட்டில் எவ்வாறு மிகப்பெரிய அரசியல் மாற்றம் சாத்தியமானதோ, அதேபோன்று வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.
அப்போது நமது தவெக தலைவர் மூலமாக, நீட் தேர்வுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு, இந்திய அளவிலேயே நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். இதற்கான அனைத்துத் திட்டங்களையும் நமது தலைவர் வகுத்து வருகிறார்.” என்று கூறினார்.
இதையும் படிக்க: எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!
கூடும் அரசியல் சூடு:
துறைமுகம் தொகுதியைக் கைப்பற்றிய திமுகவின் பி.கே. சேகர் பாபுவை இலக்கு வைத்து தவெக அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்துள்ள இந்த “ஆடிட்டிங் அறிக்கை” மற்றும் “ஊழல் பட்டியல்” எச்சரிக்கை, தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.