ராமநாதபுரம், பிப்ரவரி 23, 2026: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாறுக்கரையில் அமைந்துள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திய சிலர், பின்னர் பேருந்து நிலையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கைகலப்பும் ஏற்பட்டது. இதற்கிடையில், காரை ஓட்டிய இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தை அங்கும் இங்கும் தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதில் அருகிலிருந்த ஏராளமான கடைகள் சேதமடைந்ததுடன், பொதுமக்களும் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மதுபோதையில் சரமாரியாக காரை இயக்கிய நபர்:
Near Kamudhi bus stand, a drunken altercation led to a car driver going on a rampage, damaging the cars, bikes, and a petty shop there. Two people suffered leg fractures. The police apprehended and took away the person who was driving the car. pic.twitter.com/58vOodxHbw
— RushLane (@rushlane) February 23, 2026
மதுபோதையில் இருந்த அந்த நபர், காரை வேண்டுமென்றே அருகில் இருந்த மக்கள் மற்றும் கடைகள் மீது ஏற்றி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். ஒருமுறை மோதிய பிறகும், காரை ரிவர்ஸ் எடுத்து மீண்டும் அதிவேகமாக அருகிலிருந்த கடைக்குள் நுழைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் காரின் முன்புறமும் பின்புறமும் கடுமையாக சேதமடைந்தது. பழக்கடை, பெட்டிக்கடை, இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் உள்ளிட்டவற்றின் மீது வாகனம் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: அதிமுக ஒரு Copy–paste’ அரசியல்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..
இளைஞரை தாக்கிய பொதுமக்கள்:
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காரை சுற்றிவளைத்து, காரை ஓட்டிய இளைஞரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை காரிலிருந்து கீழே இழுத்து உட்கார வைத்து கடுமையாக கண்டித்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு இளைஞர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் உயிர் காக்க அச்சத்துடன் அருகிலிருந்த கடைகளுக்குள் ஓடி தஞ்சம் அடைந்தனர்.
இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு காவலர், குடிபோதையில் காரை இயக்கிய நபரை பலமுறை தடுக்க முயன்றும் முடியாமல் போராடியதாக காணொளி மூலம் தெரிய வருகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?
போலீசார் விசாரணை:
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காயமடைந்த இருவரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் காரை இயக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.