சென்னை, பிப்ரவரி 23, 2026: தமிழகத்தில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR 2026) 27.10.2025 முதல் 23.02.2026 வரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 27.10.2025 நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அதன் பின்னர் வீடு தோறும் கணக்கெடுப்பு, பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
27.53 லட்சம் பேர் சேர்ப்பு:
கணக்கெடுப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பெயர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலுக்கு எதிராக 19.12.2025 முதல் 30.01.2026 வரை ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகள் பெறப்பட்டன. அந்த காலப்பகுதியில் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதுடன், 4.23 லட்சம் தகுதியற்ற நபர்கள் நீக்கப்பட்டனர். இந்த அனைத்து திருத்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான பெயர்கள் உறுதிசெய்யப்பட்ட பின்னர் 23.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:
23.02.2026 நிலவரப்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் 2,77,38,925 ஆண் வாக்காளர்கள், 2,89,60,838 பெண் வாக்காளர்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். பெண்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறையாக வாக்குரிமை பெற்ற இளைஞர் வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்; 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேர் உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27–சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தின் 6–ஆவடி தொகுதியில் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தின் 18–துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து 16–எழும்பூர் தொகுதியில் 1,34,879 பேர் பதிவாகியுள்ளனர்.
மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது… நயினார் நாகேந்திரன் அளித்த பதில்!
எப்படி விண்ணப்பிப்பது:
வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். பெயர் சேர்க்க (படிவம் 6), பெயர் திருத்தம் செய்ய (படிவம் 8), அல்லது பெயர் நீக்க கோர (படிவம் 7) ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். 01.01.2026 அன்று 18 வயது நிறைவு செய்தும் பெயர் சேர்க்கப்படாதவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம், https://voters.eci.gov.in இணையதளம், “Voter Helpline” செயலி அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதிவு அலுவலரின் தீர்ப்புக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 பிரிவு 24(அ)ன் கீழ் 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு 1950 அல்லது 1800-4252-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.