சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!
TVK Executive Arrested Chennai: சென்னையில் வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்து புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரை ராயபுரம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, சென்னை மாவட்டத்தில் ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 43- ஆவது வார்டு வட்ட செயலாளர் பாம்பு தினேஷ் என்பவர் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார். மேலும், சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுட்டிருந்தார். இந்த நிலையில், வாக்குப் பதிவு நாளில் காசிமேடு பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமியை தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பாம்பு தினேஷ் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அந்த சிறுமியிடம் பாம்பு தினேஷ் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை அவரது வீட்டின் அருகே பாம்பு தினேஷ் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறுமிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அந்த சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..




தவெக நிர்வாகியை கைது செய்த போலீசார்
பின்னர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பாம்பு தினேஷை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை பாம்பு தினேஷ் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் தவெகவினர் 7 பேர் கைது
ஏற்கனவே, ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் ஆன விஜய் தாமு தனது பிறந்தநாளில் கட்சியினர் பரிசாக அளித்த வாளால் பிறந்தநாள் கேக்கை வெட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதே போல, ராமநாதபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கட்சியின் துண்டை அணிந்தவாறு காரில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.. என்ன நிலைபாட்டில் உள்ளது இடதுசாரிகள்!