அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..
Tamil Nadu Assembly Election: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில், பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஜி.கே.வாசன் கேட்ட தொகுதிகளுக்கு கூட்டணியில் யாரும் செவி சாய்க்காததால், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
Tamil Nadu Polls 2026: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதற்காக, நேற்று டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் பியூஷ் கோயலை சந்தித்த, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு
முக்கிய நிகழ்வை புறக்கணித்தத வாசன்:
பின்னர், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில், பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஜி.கே.வாசன் கேட்ட தொகுதிகளுக்கு கூட்டணியில் யாரும் செவி சாய்க்காததால், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார். தொகுதி பங்கீடு குறித்து அவர் ஏற்கெனவே, அதிமுகவுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. எனினும், அவர்கள் ஒத்துழைப்பு தராததால் பாஜகவின் அழுத்தம் மூலம் தான் கேட்ட தொகுதிகளை பெற வாசன் முயற்சித்துள்ளார். எனினும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.




6 தொகுதிகளை எதிர்பார்த்த தமாகா:
அந்தவகையில், ஜி.கே.வாசன், தனது கட்சிக்குக் குறைந்தபட்சம் 6 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்தார். குறிப்பாகத் தனது செல்வாக்கு மிகுந்த டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில முக்கியத் தொகுதிகளை அவர் எதிர்பார்த்தார். ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பு, தமாகாவிற்கு வெறும் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜி.கே.வாசன் மற்றும் அவரது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னம் விவகாரத்திலும் தமாகாவுக்கு அழுத்தம்:
தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், சின்னம் விவகாரத்திலும் தமாகாவிற்கு நெருக்கடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமாகா தனது ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட விரும்பினாலும், பாஜக தரப்பில் தங்களின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இது தங்கள் கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் என நிர்வாகிகள் அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிக்க: தஞ்சாவூரில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் – சிகிச்சை பலனின்றி மரணம்
தமாகா நிர்வாகிகள் கூறுவது என்ன?
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, இந்த சட்டமன்றத் தேர்தலில் தமாகாவுக்கு 8 இடங்கள் கேட்கப்பட்டது. அதற்காக தான் மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டாம் என்று தெரிவித்தோம். ஆனால், 4 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக தெரிவித்தனர். கடைசியாக 6 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அவர்கள் அதே 4 தொகுதிகளில் இருக்கின்றனர். அதனால் தான் தொகுதி பங்கீடு நிகழ்வில் வாசன் பங்கேற்கவில்லை. 6 தொகுதிகளுக்கு குறைவாக பெற மாட்டோம், சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.