வாக்கு எண்ணும் பணி… புதுச்சேரியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு!
Puducherry Vote Counting: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், ஏதேனும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதன் காரணமாக, இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 91.69 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், புதுச்சேரி பிராந்தியத்தில் பதிவான வாக்குகள் பதிவான மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி, நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல, காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் மாஹே பிராந்தியத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
3 அடுக்கு பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம்
இதே போல, ஏனாம் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு கலைக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு மாநில போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் திங்கள்கிழமை மே 4- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அந்தந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..




3 ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்
அதன்படி, புதுச்சேரியில் 3 ஷிப்ட்களில் 1,250 போலீசார் வாக்கு எண்ணும் மையம், சுற்றுப்புற பகுதிகள், நகர மற்றும் புறநகர், கிராம பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில், அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 1 மணி வரை இரவு 9 மணி வரை 2- ஆவது ஷிப்டும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை 3- ஆவது ஷிப்ட் என 3 ஷிப்டுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களோடு 200 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சட்டம் – ஒழுங்கை பிரச்னையை தவிர்க்க பலத்த ஏற்பாடு
இதே போல, காரைக்காலில் 500 போலீசாரும், மாஹேவில் 400 போலீசாரும், ஏனாமில் 450 போலீசாரும், இவர்களுடன் தலா 100 துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், பெண் கமோண்டோக்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரியில் சில தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே வேளையில், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் ஒவ்வொரு இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..