“தீய சக்தி திமுக” – விஜய் பாணியில் வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. அனல் பறந்த பேச்சு!
Annamalai Latest Speech: தமிழக சட்டமன்ற தேர்தலில் தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை விரட்டி அடித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விடியல் சேகர், வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரமசிவன் ஆகியோரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் முதல்வரின் ஏமாற்று வித்தைகள் மற்றும் ஊழல் முறைகேடுகளை பார்க்க மக்கள் அந்த ஆட்சியை விரட்டி அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் அதிகம் வசிக்கக்கூடிய வேடசந்தூர் தொகுதியில் அமலாக்க துறையை சோதனைக்காக வர வைத்தது தான் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் சுவாமிநாதன் செய்த ஒரே சாதனையாகும்.
திமுகவின் பொய்களை மக்கள் ஏற்கவில்லை
சுவாமிநாதன் செய்த முறைகேட்டில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் வெல்லம் கரைந்து ஒழுகியதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. இந்தியாவில் எம்பிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்துவதற்கான சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இதில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற பொய்யான காரணத்தை கூறி முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்.
மேலும் படிக்க: ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!




தீய சக்தி திமுகவிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும்
ஆனால், தமிழக மக்கள் தெளிவானவர்கள். ஏனென்றால், திமுக எத்தனை பொய்களை தெரிவித்தாலும் அதனை நம்பாமல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளனர். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழக மக்களை மீட்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி செயலாற்றி வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகளாக சக்கரபாணி எம்எல்ஏவாக இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சனை குறைந்த மாதிரி தெரியவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டில் 900 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும்
தற்போது இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, தமிழகத்தின் நிலையை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஊழல் செய்து ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய அரசியை கூட பாதுகாக்க முடியாத திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும். இதற்காக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக மக்களுக்கு திட்டங்களை அள்ளி கொடுத்தவர் – திமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பிரச்சாரம்..