பிரதமர் மோடி வருகை.. எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கோவை.. கழுகு பார்வையில் 3 ஆயிரம் போலீசார்!
PM Modi Campaigning Kovai: தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இதேபோல, நாகர்கோவிலில், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், 5- ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 18) கோவை மாவட்டத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நாளை மாலை கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு வருகை தருகிறார்.
தனி விமானத்தில் கோவை வரும் பிரதமர் மோடி
அங்கிருந்து, கார் மூலம் சாலை வழியாக கொடிசியா பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி முருகன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் சாலை வழியாக கோவை விமான நிலையத்தை சென்றடைந்து, அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி திரும்புகிறார். பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்காக கொடிசியா பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: ரூ.10,000 ‘போலி செக்’.. தேர்தல் களத்தில் வெடிக்கும் பணப் புகார்களும், சட்டப் போராட்டங்களும்!!




பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
மேலும், மேடை பகுதியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி, குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் வருகையையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கோவை
மேலும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கோவை விமான நிலையம் முதல் கொடிசியா மைதானம் வரை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் வருகையால் அவிநாசி சாலை, கொடிசியா, காந்திமா நகர், சிங்காநல்லூர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக மக்களுக்கு திட்டங்களை அள்ளி கொடுத்தவர் – திமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பிரச்சாரம்..