அதிமுக தலைமை உத்தரவு.. புதுச்சேரியில் முகாமிட்டுள்ள கட்சி எம்எல்ஏக்கள்!
AIADMK MLAs Accommodated Puducherry: அதிமுகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தவெகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், அவர்கள் அந்த மாநிலத்தில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு 118 என்ற பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளிடம் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆதரவு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு உள்ள 5 எம்எல்ஏக்களின் ஆதரவை நிபந்தனையுடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113- ஆக உயர்ந்துள்ளது. இதில், மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை உள்ளது.
சி.வி. சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தனியாக ஆலோசனை
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தனது கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய எம்எல்ஏவுமான சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இது அதிமுக இரண்டாக உடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, எஸ். பி. வேலுமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.
மேலும் படிக்க: விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி? வெளியான தகவல்




தவெகவுக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
அப்போது, அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக, அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.
புதுச்சேரியில் முகாமிட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள்
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலர் புதுச்சேரி அருகே உள்ள புது குப்பம் மற்றும் பூரணாங்குப்பம் பகுதிகளில் அமைந்திருக்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அதிமுக மாபெரும் கட்சி என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார். இதேபோல, அக்கட்சியை சேர்ந்த பொன்னையனும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..