டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு
டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிசர்வ் வங்கி குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இவற்றின் கீழ் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இழப்பீட்டைக் கோர முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் மோசடியால் உங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை நீங்கள் இழந்திருந்தால், உங்களுக்கு நிவாரணம் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் மோசடி தொடர்பான விதிமுறைகளின் வரம்பை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. மிரட்டல் அல்லது கட்டாயத்தின் பேரில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்கள் உட்பட, குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
இது குறித்து வெளியான தகவலின் படி திருத்தப்பட்ட விதிகளின் கீழ், மின்னணு வங்கிப் பரிவர்த்தனை மோசடிகளில் ரூ. 50,000 வரை இழப்பைச் சந்திக்கும் தனிநபர்கள், தங்கள் மொத்த இழப்பில் 85 சதவிகிதம் வரை இழப்பீட்டைப் பெறலாம். இந்த இழப்பீடு அதிகபட்சம் ரூ.25,000 வரை மட்டுமே வழங்கப்படும். மேலும், ஒரு தனிநபர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இதைக் கோர முடியும்.
இதையும் படிக்க : தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பாஸ்வேர்டு அல்லது ஓடிபி ஆகியவை மோசடியாகப் பெறப்பட்ட பிறகு பரிவர்த்தனை செய்யப்பட்ட நிகழ்வுகளை இந்த புதிய விதிகள் உள்ளடக்கியுள்ளன. மேலும், அழுத்தம் அல்லது கட்டாயத்தின் பேரில் பாதிக்கப்பட்டவர் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்த நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
45 முதல் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு
புதிய நடைமுறையின் கீழ், மோசடிக்குள்ளாகும் மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்களை, உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு 45 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு 60 நாட்களுக்குள்ளும் வங்கிகள் விசாரிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட விசாரணைக்கு அதிக காலம் தேவைப்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க : குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மோசடியான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளரிடமிருந்து தகவல் கிடைத்த ஐந்து நாட்களுக்குள், சர்ச்சைக்குரிய தொகைக்கு இணையான ஷேடோ ரிவர்சல் தொகையை வங்கிகள் வழங்க வேண்டும். கூடுதலாக, ரூ.500க்கு மேற்பட்ட மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு உடனடி எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்ற கட்டாய விதியை ஆர்பிஐ தொடர்ந்து அமலில் வைத்துள்ளது.
ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லாத தனிநபர்களுக்கு, தகவல் தொடர்பிற்கான ஒரே மின்னணு வழியாக எஸ்எம்எஸ் மட்டுமே உள்ளது என்பதை ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. இது டிஜிட்டல் மோசடியால் மிகப்பெரிய தொகையை இழக்கும் நபர்களுக்கு குறைந்த பட்ச நிவாரணத்தை இந்த திட்டம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



