EPFO : ஒரே போன் கால்… ரூ.1.4 கோடி பறிபோனது.. எப்படி நடந்தது இந்த மோசடி?
EPFO Scam Alert: பிஎஃப் அலுவலர் என்று பேசியதை நம்பி மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் 1.4 கோடி ரூபாயை இழந்திருக்கிறார். மோசடியில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ்அப்பில் இபிஎஃப்ஓ சம்மந்தப்பட்ட டாக்குமென்ட்டை அனுப்பியிருக்கிறார். அதனை நம்பி பாதிக்கப்பட்ட நபர் பணத்தை இழந்திருக்கிறார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ(EPFO) தொடர்பான அழைப்பு அல்லது வாட்ஸ்அப்பில் அரசு ஆவணம் போன்றமளிக்கும் டாக்குமென்ட் வந்தால் கவனமாக இருங்கள். தி எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியான கட்டுரையின் படி மும்பையைச் (Mumbai) சேர்ந்த 73 வயதாகும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவருக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம். இந்த மோசடி சம்பவமானது ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கி பத்து மாதங்கள் வரை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இறுதியில், பாதிக்கப்பட்டவர் தனது வாழ்நாள் சேமிப்பில் கிட்டத்தட்ட ரூ.1.4 கோடி ரூபாயை இழந்திருக்கிறார். பாதிக்கப்பட்டவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மேமாதம் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அவருக்கு போன் செய்த நபர் தன்னை அலோக் மேத்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் தான் டெல்லியில் (Delhi) உள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் ஒரு அதிகாரி என்று கூறிக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் பிஎஃப் கணக்கில் ரூ.63 லட்சத்திற்கும் மேல் சிக்கியுள்ளதாகவும், எனவே அதை விடுவிக்க முதலில் ரூ.7,230 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் இந்தத் தொகையை அனுப்பியபோது, அவர் வாட்ஸ்அப்பில் அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்களை அவருக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய ஆவணத்தில் உள்ள முத்திரை உண்மையானதாகத் தோன்றியதால், பாதிக்கப்பட்டவருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.




ஆன்லைன் மோசடியை தவிர்ப்பது குறித்து இபிஎஃப்ஓ எச்சரிக்கை
EPFO never asks for money for KYC or any other service.
If someone calls or messages you demanding payment, it’s a fraud attempt.
📢 Stay alert, report such cases to the local police or cyber crime branch.🔐 KYC update is FREE & online.
Stay Alert, Stay Vigilant!#EPFOwithYou… pic.twitter.com/doECUxxstZ— EPFO (@socialepfo) June 8, 2025
இதற்குப் பிறகு, அவர்கள் படிப்படியாக அவரிடம் பணம் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். போலி ஆவணங்களை அனுப்பி, உறுதியான குரலில் பேசியிருக்கிறார்கள். வரி அனுமதி மற்றும் சரிபார்ப்பு கட்டணங்கள் என்ற பெயரில் பணம் கேட்டிருக்கின்றனர். இந்த வழியில், பாதிக்கப்பட்டவர் அடுத்த பத்து மாதங்களில் மோசடி நபர்களுக்கு மேலும் 60 லட்சம் ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார். ஆனால் இந்த மோசடி சம்பவம் இதோடு முடிந்து விட வில்லை. சிபிஐ என்ற பெயரில் அடுத்த மோசடியைத் துவங்கியிருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணை என்ற பெயரில் மோசடி
மார்ச் 2024 இல், தன்னை மஹி சர்மா என்று அழைத்துக் கொண்ட ஒரு பெண், மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறியிருக்கிறார். மேலும் அலோக் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது சிபிஐ பிஎஃப் வழக்கை விசாரித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு போலி காசோலையும் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் வரி என்ற பெயரில் அவரிடம் பெண் செலுத்த சொல்லியிருக்கின்றனர். சிபிஐ என்றதும் பயந்து போன பாதிக்கப்பட்டவர் நவம்பர் 2024 வரை பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர்கள் அனுப்பிய காசோலையை வங்கிக்கு எடுத்து சென்ற போது தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது.
காவல்துறையினர் விசாரணை
மே 28, 2025 அன்று, பாதிக்கப்பட்டவர் டெல்லியில் உள்ள மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோசடியைச் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கும்பல் பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நிறைய பேர் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற EPFO மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது?
எந்த அரசு சார்ந்த அலுவலகங்களும் வாட்ஸ்அப்பில் ஆவணங்களை அனுப்புவதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இபிஎஃப்ஓ தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே நமக்கு அனுப்பப்படும். பணத்தை அனுப்புவதற்கு முன் எப்போதும் இபிஎஃப்ஓ உதவி எண்ணுக்கு அல்லது இணையதளம் மூலமாகவோ உறுதிப்படுத்திக்கொள்ளவும். சிபிஐ அல்லது பிற அமைப்புகளிடமிருந்து வருவதாகக் கூறி மிரட்டல் அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். சந்தேகம் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.in என்ற முகவரியில் புகார் அளிக்கவும்.