ஜி20 மாநாடு: உலக நலனுக்காக பிரதமர் மோடி முன்வைத்த 3 முக்கிய முயற்சிகள்
Modi’s Global Agenda : தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில், உலக அளவில் வளர்ச்சி அளவுகோல்கள் குறித்து ஆழமான மறுபரிசீலனை அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும் உலக நலன் குறித்து 3 முயற்சிகளை முன்மொழிந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் (South Africa) முதன்முறையாக நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில், உலக அளவில் வளர்ச்சி அளவுகோல்கள் குறித்து ஆழமான மறுபரிசீலனை அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் யாரையும் பின்தள்ளாத, இணைந்த மற்றும் நிலைத்த பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த அமர்வில் அவர் பேசியபோது, சர்வதேச நிதி மற்றும் வளர்ச்சி வடிவமைப்புகளை ஜி20 உருவாக்கினாலும், அவை பல மக்களை வளங்களிலிருந்து விலக்கி, இயற்கை வளங்களை அதிக அளவில் சுரண்டச் செய்யும் சூழலை உருவாக்கியுள்ளன என குறிப்பிட்டார். இந்த பாதிப்புகளை அதிகமாக உணர்ந்து கொண்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகள் தான் எனவும் அவர் கூறினார்.
உலக நலனுக்காக பிரதமர் மோடி முன்வைத்த 3 புரட்சிகரமான முயற்சிகள்
பிரதமர் நரேந்திர மோடி உலக நலன் குறித்து 3 புரட்சிகரமான முயற்சிகளை முன்மொழிந்தார். அதுகுறித்து பார்க்கலாம்.
1. உலக பாரம்பரிய அறிவு களஞ்சியம்
உலகின் பல சமூகங்கள், பசுமை சமநிலை, கலாச்சாரம், சமூக ஒற்றுமையை பேணும் வாழ்க்கை முறைகளை தலைமுறைகளாக பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த அறிவு உலகிற்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனை ஒருங்கிணைக்க ஜி20ன் கீழ் உலக பாரம்பரிய அறிவு களஞ்சியம் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.




இதையும் படிக்க : ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த பிரதமர் மோடி.. இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற அழைப்பு..
இந்தியாவின் இந்தியன் நாலேஜ் சிஸ்டம் என்கிற முயற்சி இந்த தளத்தின் அடித்தளமாக அமையும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான தன்னிறைவு மற்றும் இயற்கை மீதான மரியாதையை உள்ளடக்கிய பாரம்பரிய வாழ்க்கை குறித்த அறிவுகளை பதிவு செய்து, அதை உலக சமூகத்துடன் பகிர்ந்து, அடுத்த தலைமுறைக்கும் பாதுகாக்கும் ஒரு பெரிய முயற்சியாக இது அமையும் என்றார்.
2. ஆப்பிரிக்க திறன் வளர்ப்பு முயற்சி
மேலும் பேசிய பிரதமர் மோடி, ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் உலக முன்னேற்றம் என பிரதமர் மோடி கூறினார். இதற்காக அவர் ஜி20 ஆப்பிரிக்க திறன் வளர்ப்பு முயற்சியை அறிவித்தார். இது பயிற்சியாளருக்கு பயிற்றுவி என்ற முறைப்படி செயல்படும். அனைத்து ஜி20 நாடுகளும் இணைந்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் திறன் பயிற்சியாளர்களை உருவாக்குவது இந்த முயற்சியின் பெரிய இலக்கு. பின்னர் இவர்கள் ஆப்பிரிக்காவின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவார்கள். இதன் மூலம் ஆப்பிரிக்காவின் மனிதவள திறன் மிக வேகமாக வளர்ச்சி பெறும்.
இதையும் படிக்க : துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
3. போதைப்பொருள்–தீவிரவாத இணைப்பு எதிர்ப்பு முயற்சி
பிரதமர் மோடி உலகில் மிகவும் ஆபத்தான பிரச்னைகள் குறித்து பேசினார். போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கிடையேயான நெருங்கிய தொடர்பு குறித்து பேசிய அவர், மிக அதிக அளவில் உயிரைக் குடிக்கும் போதைப் பொருட்களை இன்று உலகம் முழுக்க பரவிக் கொண்டிருப்பதாகவும், இவை பொது சுகாதாரம், சமூக அமைதி, உலக பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் பாதிக்கும் என அவர் எச்சரித்தார். இதற்கு தீர்வாக போதைப்பொருள் – தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.