உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்.. 4 இந்தியர்கள் உயிரிழப்பு..
இந்தச் சம்பவம் குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது. ஆயுத மோதல்கள் நடைபெறும் காலகட்டத்திலும், சர்வதேச கடல் போக்குவரத்தின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஜூலை 20, 2026: உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடேசா துறைமுகம் அருகே தானியங்களை ஏற்றிச் சென்ற எம்.வி. கோல்டன் லியோ என்ற வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய அரசு கண்டனம்:
இந்தச் சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) தகவலின்படி, கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் எம்.வி. கோல்டன் லியோ கப்பல் பயணித்துள்ளது. ஜூலை 19-ஆம் தேதி ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கப்பல் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 5 பேர் இந்தியர்கள். தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், மற்றொரு இந்தியர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த இந்தியர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்கு இந்தியா கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது.
ஆயுத மோதல்கள் நடைபெறும் காலகட்டத்திலும், சர்வதேச கடல் போக்குவரத்தின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது.
9 பணியாளர்கள், கடற்படை விமானி உயிரிழப்பு:
கினியா-பிசாவு நாட்டின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்றதாக உக்ரைன் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 9 கப்பல் பணியாளர்கள் மற்றும் ஒரு கடற்படை விமானி உயிரிழந்ததாகவும், 17 பணியாளர்களில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்எஸ்இஜி கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, கோல்டன் லியோ கப்பல் மும்பையைச் சேர்ந்த ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும், ஃபிரெண்ட்ஸ் ஷிப்பிங் கோ. எஸ்.ஏ. நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.