UPI : தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம்.. யுபிஐ-ல் வரும் Charge Back அம்சம்!
UPI Chargeback Feature From July 15, 2025 | இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான யுபிஐ சார்ஜ்பேக் அம்சத்தை என்பிசிஐ யுபிஐ-ல் ஜூலை 15, 2025 முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

டிஜிட்டல் இந்தியா (Digital India) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணம் செய்துக்கொண்டு இருக்கும் நிலையில் , இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது யுபிஐ சார்ஜ்பேக் (UPI Chargeback) விதிகளை விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் சார்ஜ் பேக் அம்சத்தை அறிமுகம் செய்யும் என்பிசிஐ
தற்போதைய காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பண பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப கோளாறு, சர்வர் கோளாறு உள்ளிட்ட காரணங்கள் காரணமாக பணம் சென்று சேறுவதில் அல்லது பணம் வங்கி கணக்கிற்கு வருவதில் சிக்கல் ஏற்படலாம். இத்தகைய சூழலில் பணத்தை பெற வேண்டும் என்றால் பயனர்கள் குறைந்தது மூன்ற நாட்கள் வங்கியின் தலையிடலுக்காக காத்திருக்க வேண்டும். இது அவசர தேவைகளுக்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் என்பிசிஐ இந்த யுபிஐ சார்ஜ்பேக் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
யுபிஐ-ல் சார்ஜ் பேக் அம்சத்தின் சிறப்புகள் என்ன?
பயனர்கள் தங்களது பணம் தவறாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படுவது, வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும் பணம், பணம் பெறும் நபருக்கு பணம் சென்று சேராமல் இருப்பது ஆகிய சிக்கல்களுக்கான சிறந்த தேர்வு தான் இந்த யுபிஐ சார்ஜ்பேக் அம்சம். இதனை பயன்படுத்தி பயனர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இந்த சார்ஜ் பேக் அம்சத்தில் ஒரு வங்கி கணக்கு அல்லது யுபிஐ கணக்கிற்கு ஒரு மாதத்திற்கு 10 சார்ஜ்பேக் கோரிக்கைகள் எழுப்ப அனுமதி வழங்கப்படுகிறது.




அதற்கு மேல் சார்ஜ்பேக் அம்சத்தை பயன்படுத்த முடியாது. பெரும்பாலும் யுபிஐ மூலம் வெற்றிகரமாக பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த அளவை மாதத்திற்கு 10 என்ற அடிப்படையில் என்பிசிஐ நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.