2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை
Anthropic Insider Warns of AI Risk : 2030 முடிவதற்குள் ஏஐ மக்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடும் என்று கூறி ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயதான ஏஐ ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2030 முடிவதற்குள் ஏஐ மக்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடும் என்று கூறி ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயதான ஏஐ ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது வேலையை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் ஆகிய நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவம் பெற்ற காக்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
அவரது பதிவில், ஓபன் ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களும் ஏஐ வளர்ச்சியை பொறுப்புடன் கையாளவில்லை என்றும், மனிதர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டலிஜென்ஸை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க : நாளை அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. முக்கிய அம்சமாக களமிறங்கு ஆப்பிள் ஃபோல்டு!




ஏஐயின் வளர்ச்சி ஆபத்தானதா?
காக்சனின் கருத்துப்படி, எதிர்காலத்தில் உருவாகும் அதிநவீன ஏஐ அமைப்புகள் மனிதர்களை விட பல துறைகளில் அதிக திறன் கொண்டதாக மாறக்கூடும். அத்தகைய ஏஐயால் சைபர் தாக்குதல்களை நடத்துவது, பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவது, அதிகாரங்களை தானாகவே பெற்றுக்கொள்வது போன்ற செயல்களை செய்ய முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது வேகம் குறையாமல் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓபன் ஏஐயில் ஏஐயின் ஆபத்துகள் குறித்த தீவிரமான புரிதல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் ஏஐ ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்து நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர் என்றும், ஆனால் மற்றவர்கள் முதலில் உருவாக்கிவிடுவார்கள்.
எனவே நாம்தான் முதலில் உருவாக்க வேண்டும் என்ற போட்டி மனநிலை காரணமாக அந்த நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையை, மனிதகுலத்தையே பணயம் வைக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தான முயற்சி என்றும் அவர் தெரிவித்துளளார்.
இதையும் படிக்க : அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
ஏஐ நிறுவனங்களுக்கு கோரிக்கை
ஏஐ ஆய்வகங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஏஐ வளர்ச்சி எந்த நிலைக்கு செல்லும் என்பதை தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று காக்சன் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, ஏஐயின் திறன்களை அதிகரிக்கும் முயற்சிகளை வேகப்படுத்துவதற்கு முன்பு, அந்த ஏஐ அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் மனநிலை குறித்து போதுமான புரிதல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.