மாறிய பெயர்கள்… மாறாத திட்டங்கள்?.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிளம்பிய விமர்சனம்!!
தமிழக அரசின் முதலாவது பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறைக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, அவற்றை புதிய திட்டங்கள் போல தமிழக அரசு அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 07: தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன், மண்வளப் பாதுகாப்பு மற்றும் சாகுபடிப் பரப்பை அதிகரித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான திட்டங்கள் புதியவை அல்ல என்றும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, அவற்றை புதிய திட்டங்கள் போல மறுஅறிவிப்பு செய்துள்ளனர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
வேளாண் திட்டங்களின் பெயர் மாற்றப் பட்டியல்
வேளாண் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள திட்டங்களின் பெயர்களை உற்றுநோக்கும் போது, திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் பெயர் மாற்றம் கண்டுள்ளது தெரியவருகிறது. நகர்ப்புறங்களில் புகழ்பெற்ற ‘மாடித் தோட்டம் திட்டம்’ தற்போது ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, பாரம்பரிய பனை மரங்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘பனை மேம்பாட்டு இயக்கம்’ இனி ‘பனை பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘தமிழ்நாடு வேளாண் காடுகள் திட்டம்’ இனி வெறும் ‘வேளாண் காடுகள் திட்டம்’ என்றும், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கருத்தியல் அடிப்படையில் அமைந்த திட்டம் இனி ‘அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்’ என்ற பெயரிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்வளத்தைச் சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்’ திட்டத்தின் பெயர் ‘தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
தென்னை விவசாயிகளுக்காக நடைமுறையில் இருந்த ‘ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்’ இனி ‘தென்னை சிறப்புத் திட்டம்’ என அழைக்கப்படும். விவசாயிகளை ஊக்கப்படுத்த வழங்கப்பட்டு வந்த விருதுகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன; அதன்படி மாவட்ட அளவிலான சிறந்த விவசாயி விருது இனி ‘வெற்றி விவசாயி விருது’ என்றும், மாநில அளவிலான சிறந்த விவசாயிக்கான விருது ‘அஞ்சலை அம்மாள் விருது’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
கிராமப்புற வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த திமுக அரசால் கொண்டுவரப்பட்ட ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ மற்றும் ‘கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ ஆகிய முக்கியத் திட்டங்கள், தற்போது ‘ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்குப் புதிய கட்டடங்கள்’ அமைக்கும் திட்டமாக உருமாற்றப்பட்டுள்ளன. பருத்தி உற்பத்தியைப் பெருக்க அமைக்கப்பட்ட ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ தற்போது ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ எனப் புதிய பெயருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்களுக்கே பெயர்களை மாற்றிப் புதிய திட்டங்கள் போல அறிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.