Tamilnadu Agriculture Budget 2026: அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு லட்சங்களில் ரொக்கப் பரிசு.. அரசின் முக்கிய விருதுகள் & தகுதிகள்..
Tamilnadu Agriculture Budget 2026: அதிக மகசூல் பெறும் சிறுகுறு விவசாயிகளுக்கு ₹2 லட்சம் வரை ரொக்கப்பரிசு, நம்மாழ்வர் விருது & அஞ்சலி அம்மாள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய விருதுகளும், லட்சக் கணக்கிலான ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் சிறுகுறு விவசாயிகள் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகளும், லட்சக்கணக்கான ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விவசாயிகள் அரசின் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதியாகப் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
மக்கள் சேவகர் அஞ்சலி அம்மாள் சிறுகுறு விவசாய விருது:
சிறுகுறு விவசாயிகளிடையே ஆரோக்கியமான போட்டியினை உருவாக்கி, சாகுபடி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 10 முக்கியப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சம், ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும். இப்போட்டியின் மூலம் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 சிறந்த சிறுகுறு விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்க ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான ‘வெற்றி விவசாயி விருது’:
மாவட்ட அளவில் விவசாயிகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இப்புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் ஏதேனும் ஒன்றைச் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மாவட்ட அளவில் மொத்தம் 90 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கென ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறந்த உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வர் விருது’:
தமிழ்நாட்டில் இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளைப் பரவலாக்கும் நோக்கிலும், மண்ணையும் மனித ஆரோக்கியத்தையும் காக்கும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயிர்ம முறையில் சாகுபடி செய்து அசத்தும் 5 சிறந்த விவசாயிகளுக்குப் பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ₹11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குடன் கூடிய 8 புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
காட்பாடி (வேலூர்), குடியாத்தம் (வேலூர்), முசிரி (திருச்சிராப்பள்ளி), நரிக்குடி (விருதுநகர்), போடிநாயக்கனூர் (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர் திருவண்ணாமலை வட்டாரம் ஆகிய பகுதிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.27.82 கோடி செலவில் இக்கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.