ஆளுநர் உரையில் தவெக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இல்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
T. T. V Dhinakaran : தமிழக ஆளுநர் அர்லேகர் உரையில் தமிழக வெற்றிக் கழக அரசின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்தி இருந்தார். இந்த உரை தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில உரிமை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசால் தயார் செய்யப்பட்ட ஆளுநர் உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரமாகவே அமைந்திருக்கிறது. மக்களை நாட்டின் உண்மையான எஜமானர்கள் என்ற அண்ணாவின் வரிகளோடு தொடங்கிய ஆளுநரின் உரையில், காலப்போக்கில் அனைத்து இந்தியாவுக்கும் ஒரு பொது தொடர்பு மொழி உருவாக வேண்டும் என்ற அவரின் முக்கிய வாதத்தை மறைத்து, தமிழக மாணவர்கள் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப 3- ஆவது மொழியை பயில தடையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
இரு மொழி கொள்கையே தொடரும் என அறிவிப்பதும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை ஆராய்ந்து பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பதும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக்குதல், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பது, கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது, நதிகளை இணைப்பது ஆகிய எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாமல், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ஆளுநர் உரையை அப்படியே கட், காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..




காங்கிரஸ் மீதான விசுவாசத்தை காட்டுகிறது
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசையும், பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவோம் கூறும் கேரள அரசையும் கண்டிக்க முடியாமல் ஆட்சி எனும் நாற்காலியின் 4- ஆவது காலை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மீதான தவெக அரசின் விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஒரு மாத ஆட்சிக்கு அடையாளமாக மாறி உள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமில்லை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம் என கவர்னர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமும் அல்லது செயல்திட்டமோ ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு.. முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 5வது இடத்தில் இபிஎஸ்!