திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!
Trichy East By Election: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக அவரே பதில் அளித்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இந்த தொகுதியுடன் சேர்த்து சுமார் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியா
இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் போட்டியிட இருப்பதாகவும், அந்த தொகுதியின் திமுகவினர் போட்டியிட வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு. க. ஸ்டாலின் இது தொடர்பாக கூறியதாவது: நான் திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் தற்போது வரை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வைகோ தலைமையில் நடந்த மதிமுக கூட்டம்.. புறக்கணித்த சீர்காழி எம்எல்ஏ.. கொடுத்த அதிரடி விளக்கம்!!




விரைவில் சட்டசபைக்கு வருவார் மு.க.ஸ்டாலின்
இதனிடையே, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வியை சந்தித்த காரணத்தால் மு. க. ஸ்டாலினால் சட்டசபைக்கு வர முடியாத நிலை உள்ளது. ஆனால், அவர் விரைவில் சட்டசபைக்கு வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே. என். நேரு கூறியிருந்தார். சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு. க. ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி. எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சொந்த தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கில் தவெக சார்பில் யார் போட்டி
இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், முதல்வர் விஜயின் தந்தை சந்திரசேகர், பிரபல நடிகை, நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் போட்டியிட இருப்பதாக பெயர்கள் அடிபட்டு வந்தது. அத்துடன், திமுக சார்பில் மு. க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?