வைகோ தலைமையில் நடந்த மதிமுக கூட்டம்.. புறக்கணித்த சீர்காழி எம்எல்ஏ.. கொடுத்த அதிரடி விளக்கம்!!
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அரசியல் சூழல் நிலவியதால், திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட செந்தில் செல்வன் தீர்மானித்தார். திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, அவர் ஏற்கனவே இருந்து வந்த மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அப்போதே முறைப்படி விலகினார்.
சென்னை, ஜுன் 26: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மதிமுக – திமுக கூட்டணி முறிவு விவகாரம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தைப் புறக்கணித்த சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் வெளியிட்டுள்ள அதிரடி விளக்கம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தலைவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’.. முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்..
சீர்காழி எம்.எல்.ஏ புறக்கணிப்பு:
நாளை மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், கூட்டணி முறிவிற்கான காரணங்கள் குறித்தும் விவாதிக்கவே இன்று வைகோ தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துரை வைகோ, ரோகையா, பூமிநாதன், ஜீவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக சார்பில் இரண்டு எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இக்கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் கூட்டத்திற்கு வராதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பல்வேறு ஊகங்களையும் கிளப்பியது.
நான் மதிமுகவிலேயே இல்லை:
கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்து எழுந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் அதிரடியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். “நான் மதிமுகவில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டேன்; தற்போது அந்த கட்சியில் நான் இல்லை. எனவே, அக்கட்சியின் உள்விவகார ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எனக்கு எழவில்லை.”
விலகலுக்கான பின்னணி காரணம்:
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அரசியல் சூழல் நிலவியதால், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட செந்தில் செல்வன் தீர்மானித்தார். திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, அவர் ஏற்கனவே இருந்து வந்த மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அப்போதே முறைப்படி விலகினார்.
அதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தற்போது தான் முழுமையாகத் திமுகவின் அடிப்படை உறுப்பினராகவே நீடிப்பதால், தனது சட்டமன்றப் பணிகளைத் திமுகவிலேயே தொடர்ந்து தொடரப் போவதாகவும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..
நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவு:
ஏறக்குறைய திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவது உறுதியாகிவிட்ட சூழலில், மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் தான் திமுகவிலேயே நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளது மதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி முறிவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை நடைபெறவிருக்கும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வைகோ வெளியிடுவார் என்று ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.