“தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!!
Udhayanidhi Stalin Assembly Speech: தொகுதி மறுவரையறையால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் 25 ஆண்டுகளுக்கு இதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த முக்கிய விவாதத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் திமுக தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்தியாவுக்கே முதன்முதலில் சுட்டிக்காட்டியது திமுகதான் என்பதை நினைவூட்டிய அவர், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் திமுக ஆட்சியில் எடுத்த தொடர் நடவடிக்கைகள் குறித்து அவையில் விரிவாகப் பேசினார்.
இதையும் படிக்க: “தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்”.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!
திமுக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள்:
சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டம், தென் மாநிலங்கள் மற்றும் பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுதல், மற்றும் டெல்லியில் ‘நியாயமான தொகுதி மறுவரையறை’ என்ற தலைப்பில் இணை நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தியது வரை திமுக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளை அவர் அடுக்கினார். இந்தக் கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதிகளை நிர்ணயித்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துவிடும் என்ற உண்மையை விளக்கிக் கூறியதை நினைவுகூர்ந்தார்.
1971 கணக்கெடுப்பே தொடர வேண்டும்:
தொகுதி மறுவரையறைப் பணிகளை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்றும், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார். சட்டத்திருத்தம் கொண்டு வரப்படாவிட்டால் 2027-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு மாநில உரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்தார். அதேவேளையில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை திமுக முழுமையாக வரவேற்பதாகவும், ஒருவேளை மகளிர் இடஒதுக்கீட்டிற்காகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், அது 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!
மாநில உரிமையில் உறுதியான நிலைப்பாடு:
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரமான 7.18 சதவீதம் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்திற்குத் தனது முழு ஆதரவை வழங்கினார்.