“உள்ளுக்குள் ஊமைக்காயம் இருக்கிறது.. 2 நாட்களில் முக்கிய முடிவு”.. வைகோ அதிரடி அறிவிப்பு!!
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டிய வைகோ, "இந்தக் கூட்டணியில் நம்மைப் போல திமுக தலைமையைக் கொண்டாடி, விசுவாசமாக இருந்தவர்கள் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட தோழமையையும், பாசத்தையும், மரியாதையையும் பாதுகாத்துத்தான் நாங்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
டெல்லி, ஜுன் 25: திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்றைய தினம் டெல்லி சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் மதிமுக எதிர்கொள்ளும் கௌரவப் பிரச்சனைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அதிரடியாகவும் பேசியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வைகோவின் மகன் துரை வைகோ திமுக மீது சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் படிக்க: மின் துறையில் எவ்வளவு நஷ்டம்? நிதி நிலை என்ன? காலை 10.30 மணிக்கு வெளியாகும் வெள்ளை அறிக்கை..
2 நாட்களில் முக்கிய முடிவு:
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இன்னும் இரண்டு நாட்களில், ஜூன் 26-ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மறுநாள் ஜூன் 27-ஆம் தேதி கழகத்தின் பொதுக்குழு கூட இருக்கிறது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் முக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, மிக முக்கியமான தக்க முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு முன்பாக நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “கழக கண்மணிகளுடைய கருத்துக்களையும், அவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து நாங்கள் முடிவெடுப்போம். எங்கள் தன்மானத்தை நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
நம்மைப் போல விசுவாசமாக யாரும் இருந்ததில்லை:
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தக் கூட்டணியில் நம்மைப் போல திமுக தலைமையைக் கொண்டாடி, விசுவாசமாக இருந்தவர்கள் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட தோழமையையும், பாசத்தையும், மரியாதையையும் பாதுகாத்துத்தான் நாங்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
“ஊமைக்காயம்… உரிய அங்கீகாரம் கிடைத்ததா?”
கூட்டணியில் நீடித்தாலும் மதிமுக தொண்டர்களின் உள்ளத்தில் ‘ஊமைக்காயம்’ இருப்பதாக வைகோ வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். கட்சி சந்திக்கும் புறக்கணிப்புகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்தார். மதிமுக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சிறிய கிராமங்களிலும் கூட வியாபித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய அங்கீகாரம் இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்டதா? உரிய இடத்திலே மதிமுகவிற்கு கௌரவம் வழங்கப்பட்டதா? உரிய விகிதத்தில் இடங்களும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதியும் கிடைத்ததா? இந்தக் கேள்விகள் எல்லாம் தற்போது கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாகவும், இத்தகைய அரசியல் சூழலில்தான் தான் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
அரசியல் பரபரப்பு:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் தனிச் சின்னம் தொடர்பான விவகாரங்களில் மதிமுக-விற்குள் அதிருப்தி நிலவி வருவதை வைகோவின் இந்த “ஊமைக்காயம்” என்ற வார்த்தை உறுதிப்படுத்தியுள்ளது. வரும் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழுவின் முடிவுகள் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.