மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
Free Bicycle New Design : அரசுப் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் டிசைன், வண்ணம் உள்ளிட்டவை மாற்றம் செய்வதற்காக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் முதல் – அமைச்சரின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2026 – 2027 கல்வி ஆண்டிலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த சைக்கிள்களில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விலையில்லா சைக்கிளின் டிசைன், அதன் வண்ணம் ஆகியவற்றை வேறுவிதமாக மாற்றும் வகையில் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டிலேயே 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுவிதமான டிசைனில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இலவச சைக்கிளில் புதிய டிசைன் – வண்ணம்
காலத்துக்கு ஏற்றவாறு பள்ளி மாணவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில், இந்த இலவச சைக்கிள்களில் புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டமானது கடந்த 2001- 2002- ஆம் கல்வி ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்காக இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வந்தன.
மேலும் படிக்க: அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்.. பறந்த பேப்பர்கள்.. களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்.. நடந்தது என்ன?




5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு சைக்கிள்
தொடர்ந்து, இந்த திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதே போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்தவித தகுதியும் இன்றி அனைத்து மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
ரூ.240 கோடி மதிப்பில் இலவச சைக்கிள்கள்
ஆனால், பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதில்லை இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.240 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொலைதூர பள்ளிகளுக்கு எளிதாக சென்று வர இந்த இலவச சைக்கிள்கள் பெரிதும் உதவி வருகின்றன. கிராமப்புறங்களில் பெண்களிடையே கல்வியை ஊக்குவிப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேலும் படிக்க: “திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!