சி.எம். தனி செயலர் நியமனத்தில் வெடித்த சர்ச்சை.. தவெக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.. அரசாணையில் குறிப்பிடப்பட்ட அந்த வார்த்தை!
CM Personal Secretary Jagadish: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் தனி செயலாளராக அவரது மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தையால் சர்ச்சை அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிகராக இருந்த போது, அவருக்கு மேலாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமி என்பவருக்கு முதல்வரின் தனி செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஏனென்றால், முதல்வர் ஜோசப் விஜய் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமாக ஜெகதீஷ் பழனிசாமி இருந்து வந்தார். இவர், முதல்வர் விஜய்க்கு உதவியாளராகவும், மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். மேலும், இவர் தி ரூட் என்ற பி. ஆர். நிறுவனத்தை தொடங்கி விஜய் நடித்த திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகும் விஜய்க்கு மிகவும் நெருக்கம் ஆனவராகவே ஜெகதீஷ் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
முதல்வரின் தனி செயலராக ஜெகதீஷ் நியமனம்
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தனி செயலாளராக மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் நேற்று திங்கள் கிழமை ( ஜூன் 22- ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. அப்போது, முதல்வர் விஜய்யுடன் அவரது மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி புகைப்படம் எடுத்திருந்தார்.
மேலும் படிக்க: தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!




அரசாணைக்கு முன்னதாக சமூக வலைதளத்தில் பதிவு
அந்த புகைப்படத்தை ஜெகதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், தான் முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நியமனம் குறித்து அரசு சார்பில் அரசாணை எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெகதீஷின் இந்த பதிவு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த பதிவு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதலமைச்சரின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டதாக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

ஜெகதீஷ் வெளியிட்ட பதிவு
அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை
அந்த அரசாணையில் கடந்த மே 12- ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் கேள்விகளை எழுப்பியது. ஒரு மாதம் ஆகியும் எதற்காக இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும், அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே தான் முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததும் அரசின் வெளிப்படை தன்மை குறித்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜோசியரான ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சர்ச்சை எழுந்ததால் அவர் பணி நியமனம் திரும்ப பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அமைச்சர்கள் ஆக்குவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? அமைச்சரவையில் பொறுப்பேற்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லையா? ஆ. ராசா கடும் விமர்சனம்..