அமைச்சர்கள் ஆக்குவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? அமைச்சரவையில் பொறுப்பேற்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லையா? ஆ. ராசா கடும் விமர்சனம்..
நீட், புதிய கல்விக் கொள்கை மற்றும் மொழித் திணிப்பு போன்ற விவகாரங்களில் தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றத் தயாரா என முதலமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பினார். "140 கோடி மக்கள் வாழும் நாட்டில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கலாம். ஆனால் 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு அதை ஏற்க மறுக்கும் உரிமையும் தைரியமும் கொண்ட மாநிலம்" என்றார்.
ஜூன் 23, 2026: மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு மற்றும் மொழித் திணிப்பைக் கண்டித்து, அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையின் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
இது ஒரு பொம்மை அரசாங்கம்:
அப்போது சிய அவர், “மத்தியில் நடைபெறும் அக்கிரமங்களையும், தமிழ் மொழி, தமிழ் இனம் மற்றும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறும் அரசாக தமிழக அரசு உள்ளது. இது ஒரு பொம்மை அரசாங்கமாக செயல்படுகிறது” என்றார்.
மேலும், நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டதையும், சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் கண்டிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். “பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், இன்று அதற்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
முதலமைச்சருக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்த அவர், “எங்கள் கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை பெருமையாக பேசுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. நாங்கள் அவர்களை அமைச்சராக்கி இருக்கிறோம்’ என்கிறீர்கள். அவர்களை அமைச்சர்கள் ஆக்குவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? அந்த அமைச்சரவையில் பொறுப்பேற்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லையா?” என்றார்.
அரசியலில் வெட்கமில்லாத இரண்டு பேர் சேர்ந்து கொண்டு, ‘நாங்கள் ஆட்சியை நடத்துகிறோம்’ என்றால், நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? ஏன் வருத்தப்பட வேண்டும்?
ரிகர்சல் செய்துவிட்டு பேசும் முதல்வர்:
முதலமைச்சர் அந்த ஸ்கிரிப்ட்டை மட்டும் பார்த்துப் படிக்கிறார். நேற்று இரவு முழுவதும் ரிகர்சல் செய்துவிட்டு, நம்மைத் திட்டும்போது மட்டும் நிலைக்கண்ணாடி முன் நின்று மூன்று, நான்கு முறை மனப்பாடம் செய்து, என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசித்திருக்கிறார்.
நான் கேட்கிறேன். நாங்கள்தான் எங்கள் கூட்டணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தோம். ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காக உங்களுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் பிறகு, ‘அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறேன்’ என்று மார்தட்டிக்கொள்கிறீர்களே. இப்படி சொல்வதற்கு ஜனநாயகத்தில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்ததையும் சாடிய ஆ. ராசா, “எதிர்க்கட்சியை விமர்சிப்பதற்காக மட்டுமே நேரம் செலவிடாமல், தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் துணிச்சலை காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
டெல்லியை பற்றி ஒரு வார்த்தை பேச தயாரா ?
இன்றைக்கு டெல்லியைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கேட்பதற்கு முதலமைச்சருக்கு திராணி உண்டா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் பாசிசத்தை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், நடிக்காமல், கேமராவுக்கு முன் நிற்பதாக எண்ணிக்கொள்ளாமல், தமிழ்நாட்டின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டுமானால், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றத் தயாரா?
நீட், புதிய கல்விக் கொள்கை மற்றும் மொழித் திணிப்பு போன்ற விவகாரங்களில் தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றத் தயாரா என முதலமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பினார். “140 கோடி மக்கள் வாழும் நாட்டில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கலாம். ஆனால் 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு அதை ஏற்க மறுக்கும் உரிமையும் தைரியமும் கொண்ட மாநிலம்” என்றார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய ஆ. ராசா, “டெல்லிக்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாக காத்த தலைவர் ஸ்டாலின். அதேபோன்ற நிலைப்பாட்டை தற்போதைய முதலமைச்சர் எடுக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, “மொழி, இனம் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் தொடர்ந்து போராடுவோம். தலைவர் அனுமதித்தால் இதைவிட பெரிய போராட்டங்களையும் முன்னெடுப்போம்” என ஆ. ராசா தெரிவித்தார்.