மின்துறை வெள்ளை அறிக்கையில் உள்நோக்கம்.. தவெக அரசுக்கு எதிராக பாய்ந்த செந்தில் பாலாஜி!
Senthil Balaji : தமிழக வெற்றிக் கழக அரசு உள்நோக்கத்துடன் மின்சார துறைக்கான வெள்ள அறிக்கை வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக மின் துறையின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் இன்று வியாழக்கிழமை ( ஜூன் 25) வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்சார துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான பணி நியமன ஆணைகளை தற்போதைய முதல்வர் விஜய் வழங்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 40 நாட்களில் மின்சாரத் துறையில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதா. இல்லை, திமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவில்லை என்றால் அந்த பணி நியமன ஆணைகளை நாங்களே வழங்கி இருப்போம். நலிவடைந்த மின் துறையை மு. க. ஸ்டாலின் காப்பாற்றி உள்ளார். மின் துறைக்கான வட்டியில் மட்டும் சுமார் ரூ.1,200 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில் முக்கியமான விஷயங்கள் இருட்டடிக்கப்பட்டுள்ளன. கட்டண உயர்வால் மட்டும் இன்றி வருவாய் சீர்திருத்தங்களால் கடனை அடைத்து உள்ளோம்.
வருவாய் பற்றாக்குறை ரூ.34 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்
மின்சார துறையில் தற்போது உள்ள பணியாளர்கள் தான் கடந்த திமுக ஆட்சியிலும் பணியில் இருந்தனர். அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்களுக்கு நாங்களே வட்டி செலுத்தி உள்ளோம். அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறை குறைவாகும். வருவாய் பற்றாக்குறையும் ரூ. 34,000 கோடியாக குறைத்துள்ளோம். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மின்தடை எதற்காக நிகழ்கிறது. திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்து வந்தது.
மேலும் படிக்க: இத்தனை கோடி கடனா?.. இடியை இறக்கிய மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை!!




வடசென்னை அனல் மின் திட்டம்- உடன்குடி திட்டம் தொடக்கம்
மின் தேவைக்கு ஏற்ப மின்சார கொள்முதல் மற்றும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் தொகுதியான பெரம்பூரிலும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மின்சாரம் வாங்கப்படும். ஒரு வாரத்துக்கு ஒப்பந்தம் போடப்படும் மின்சாரம் வாங்கப்படும். 5 ஆண்டுகளில் புதிய மின் திட்டங்கள் இல்லை என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வடசென்னை அனல் மின் நிலைய திட்டம்- 3 மற்றும் உடன்குடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
உள் நோக்கத்தில் வெள்ளை அறிக்கை வெளியீடு
திமுக ஆட்சியில் எண்ணூர் மின் திட்டம் 75%, கொல்லிமலை திட்டத்தில் 90% பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கூறும் நிலையில் இதே பணியாளர்களை வைத்து தான் கடந்த திமுக ஆட்சியில் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு உள்நோக்கத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா? தெளிவாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர்