தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் – திருமாளவன் பேச்சால் பரபரப்பு
Thirumavalavan Admits Power Cuts : திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது தான் உண்மைதான் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும் என்றார்.
சென்னை, செப்டம்பர் 15 : திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது தான் உண்மைதான் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மின் வெட்டு பிரச்னை இருந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது மின் வெட்டு ஏற்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மை என பேசிய திருமாவளவன்
இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான். மின்வெட்டு பிரச்னையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய சக மாணவிகள்.. ஷாக் சம்பவம்!




மேலும் பேசிய அவர், திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு. விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர். பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைவார். நான் சென்னை திரும்பியவுடன் மருத்துவமனை சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பேன் என்றார்.
மேலும் பேசிய அவர், பத்திரப்பதிவுத் துறையில் தனியார் நிறுவனத்தின் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக சம்பளம் வழங்கப்படாதது மற்றும் வேலை நீக்க மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்த தகவல் தற்போது ஊடகங்கள் மூலம் என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது. முறையான புகார் அளிக்கப்பட்டால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்தகால திமுக கூட்டணி தொடர்பாக பேசிய அவர், “திமுக கூட்டணியில் நாங்கள் நீண்ட காலமாக பயணித்துள்ளோம். நாங்கள் எப்படி பணியாற்றுவோம் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தெரியும். ஆனால் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் சில பேர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள். துரோக பட்டத்தை சூட்டுகிறார்கள்.
இதையும் படிக்க : சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல் – ஒருவர் மரணம் – பரபரப்பு தகவல்
திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் வெளியேறினோம் என்பதைப் போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியானது அல்ல. என்னுடைய தலைமைத்துவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே இதை பார்க்கிறேன். நான்கு மாதமாக இதனை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். திமுக தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருப்பதனால் அதனை நான் சுட்டிக்காட்டினேன்” எனத் தெரிவித்தார்.