NEET-இல் பாஸ் செய்தும் கிடைக்காத MBBS சீட்.. நெல்லையில் சோகம்.. மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
Nellai NEET Student Self Harm : திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி தான் மருத்துவம் படிக்க விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் வீட்டின் பின் பகுதியில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரம் பகுதியில் உள்ள அன்பு நகர் சித்தார்தர் நகரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர், ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பமில்தா. தம்பதிக்கு ஸ்ருதிலயா ( 21 வயது) என்ற மகள் இருந்தார். இவர், 12- ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதி இருந்த ஸ்ருதிலயா வெற்றி பெற்றிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 7 கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான கலந்தாய்வு முடிவுகள் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், மாணவி ஸ்ருதிலயாவின் பெயர் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. இதனால், தான் மருத்துவம் படிக்க விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தியதாக கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து மாயமான மாணவி
அவருக்கு பெற்றோர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவி சுருதிலயா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதை அறிந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அச்சம் அடைந்த அவரது பெற்றோர் இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
மேலும் படிக்க: திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!




வீட்டின் பின் பகுதியில் தூக்கிட்ட மாணவி
இதில், அவரது வீட்டுக்குப் பின்பகுதியில் உள்ள ஒரு குடோனில் மாணவி ஸ்ருதிலயா கயிறால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் வீட்டின் பின்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து நிகழும் நீட் தேர்வு மரணம்
நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் ரோஷினி என்ற மாணவியும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மற்றொரு மாணவியும், ஓசூரில் வெற்றியானந்தம் என்ற மாணவர் சேக் சனா ஆகியோர் இந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க: திமுக அலுவலகத்தில் புகுந்த மர்ம கும்பல்.. அலறி துடித்த விசிக நிர்வாகி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!