AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவில் உட்கட்டமைப்பு மாற்றம்.. சேகர்பாபு வசம் இருந்த சென்னை கிழக்கு மாவட்டம் பிரிப்பு

DMK Restructuring PK Sekar Babu: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்களை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் பொறுப்பிலிருந்த கொளத்தூர் தொகுதி கைமாறுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் உட்கட்டமைப்பு மாற்றம்.. சேகர்பாபு வசம் இருந்த சென்னை கிழக்கு மாவட்டம் பிரிப்பு
அமைச்சர் சேகர்பாபு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Aug 2026 08:27 AM IST

சென்னை, ஆகஸ்ட் 29: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் நிலவி வந்தது. இத்தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்கட்டமைப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். இதன் முக்கியப் பகுதியாக, கட்சி நிர்வாகத்தை மேலும் திறம்படச் செயல்படுத்தும் வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்தி அவர் அறிவித்துள்ளார். இந்த அமைப்பியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, கட்சியின் முக்கிய நிர்வாகியான பி.கே. சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இதையும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

மாவட்டப் பிரிப்பும் சேகர்பாபுவின் பொறுப்புகளும்:

திமுகவின் சென்னை மாவட்டம் நிர்வாக வசதிக்காக வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு, மத்திய, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த பி.கே. சேகர்பாபு, கொளத்தூர், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், அம்பத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய ஆறு முக்கியச் சட்டமன்றத் தொகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்து வந்தார்.
தற்போது மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை கிழக்கு மாவட்டம் நான்கு பிரிவுகளாகப் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி, சேகர்பாபு இனி திரு.வி.க. நகர், துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளை மட்டுமே நிர்வகிப்பார் என்றும், எஞ்சிய தொகுதிகள் வேறு நிர்வாகிகளின் கைக்கு மாறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளத்தூர் தொகுதி கைமாறுவதன் பின்னணி:

இந்த மறுசீரமைப்பில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கொளத்தூர் தொகுதி சேகர்பாபுவின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு ஒரு புதிய மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திமுகவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தோல்விக்குத் தொகுதியை நேரடியாக நிர்வகித்து வந்த பி.கே. சேகர்பாபுவே முக்கியக் காரணம் என்றும், அவர் தொகுதியில் சரியாகக் களப்பணி ஆற்றவில்லை என்றும் திமுக தொண்டர்கள் சிலர் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே, கொளத்தூர் தொகுதி சேகர்பாபுவிடமிருந்து கைமாறுவதாக வெளிவரும் தகவல்கள் அரசியல் களத்தில் சூட்டை அதிகரித்துள்ளன.

மேலும் படிக்க: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!

அடுத்த கட்ட எதிர்பார்ப்புகள்

கொளத்தூர், எழும்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய தொகுதிகளை இனி நிர்வகிக்கப்போகும் புதிய மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு உட்கட்சிப் பூசல்களைக் களைந்து, அமைப்பை வலுவாக்க மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் இந்த அதிரடி முடிவுகள் திமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

Follow Us