மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே.. நியூயார்க்கில் மோகன் பாகவத் பேச்சு
மோகன் பாகவத்தின் இந்த பயணம், ஆகஸ்ட் 29ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற உள்ள ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29, 2026: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று நியூயார்க்கில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து, வீடற்ற மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். கோயிலில் பக்தர்கள் மத்தியில் பேசிய மோகன் பாகவத், உலகில் நிலவும் மோதல்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து மக்களை ஒன்றிணைக்க கிருஷ்ண உணர்வு உதவும் என தெரிவித்தார்.
மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே:
“இன்றைய உலகில் ஏராளமான மோதல்களும் முரண்பாடுகளும் உள்ளன. மக்களை ஒன்றிணைப்பது உணர்வு மட்டுமே. அந்த உணர்வு கிருஷ்ண உணர்வு. உலகில் பல்வேறு வேறுபாடுகள், முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும், உண்மையில் அனைத்தும் கிருஷ்ணரே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அனைத்தும் கிருஷ்ணரின் ஒரு பகுதிதான் என்ற புரிதல் ஒவ்வொருவரின் மனதையும் சென்றடைந்தால், உலகம் சிறந்த மற்றும் அமைதியான இடமாக மாறும் என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா:
மோகன் பாகவத்தின் இந்த பயணம், ஆகஸ்ட் 29ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற உள்ள ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை நியூயார்க் சென்றார்.
மேலும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
இதனிடையே, ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சிக்கு நியூயார்க்கில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. நிகழ்ச்சிக்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் நகர நிர்வாகத்திற்கு உள்ளதா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் ஸ்ரீ ஸ்வாமி அவதேஷானந்த் கிரி ஜி மகாராஜ், நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், நிகழ்ச்சியை விமர்சிக்கவும் உரிமை உள்ளது என தெரிவித்தார்.
உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம்:
இந்த நிகழ்ச்சி உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை எடுத்துச் செல்லும் என்றும், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற இந்திய கலாச்சார நம்பிக்கையை வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சாரப் பிரமுக் சுனில் அம்பேகர், ‘யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்’ நிகழ்ச்சி பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் மதங்களுக்கு இடையேயான சந்திப்பாக அமையும் என தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சுற்றுப்புறச் சூழலை கவனத்தில் கொள்ளவும், மற்றவர்களுடனான தொடர்புகளை அமைதியான முறையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.