திருவள்ளூரில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை.. விற்பனையாளர் மீது அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Tiruvallur Ration Shop Salesman Suspended : திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடையின் விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார் .
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மாதம் தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடையில் அருள் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களாக ரேஷன் கடையில் உள்ள பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அந்தப் பகுதி பொது மக்கள் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, கடை விற்பனையாளர் அருள் முறையான பதில் எதுவும் அளிக்காமல், அவ்வாறு தான் செய்வேன் என்று திட்டவட்டாமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குடிமைப்பொருள் வழங்கள் துறை அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இது தொடர்பாக துறை அதிகாரிகள் கவனத்துக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு கீழ் நிலை பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் ரேஷன் கடையை இரவு 8 மணி வரை விற்பனையாளர் அருள் திறந்து வைத்திருந்ததாகவும், அப்போது வட மாநில இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க: பயணிகள் கவனத்துக்கு.. செங்கோட்டை ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!




ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட்
அத்துடன், தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, உளுந்தை ரேஷன் கடை விற்பனையாளர் அருளிடம் துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி இருந்தனர். இதில், அவர் செய்த தவறை ஒத்துக் கொண்டார். அதன் அடிப்படையில், அருள் மீதான புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ரேஷன் கடை விற்பனையாளர் அருளை பணியிடை நீக்கம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.
பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி ரேஷன் பொருள்கள் பதுக்கல்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களில் முறைகேடு செய்யாமல் இருப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், பழைய குடும்ப அட்டையை, ஸ்மார்ட் கார்டாக மாற்றியது, மின்னணு இயந்திரம் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குதல், குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி விற்பனையாளர் முறைகேட்டில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் இலவச சைக்கிள் வழங்கல்.. தமிழக அரசின் அதிரடி மூவ்!