சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!
Sivakasi Fireworks Factory Accident : சிவகாசி அருகே செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நமஸ்கரித்தான்பட்டியிலும் கிருஷ்ணா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் இன்று வியாழக்கிழமை தொழிலாளர்கள் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசு வெடித்து சிதறியது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பட்டாசு வெடித்த சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
3 பேர் உயிரிழப்பு- ஒருவருக்கு தீவிர சிகிச்சை
அந்த தகவலின் பேரில், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு விபத்தில் ஆலையின் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
மேலும் படிக்க : தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?




தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணிகள்
மேலும், பற்றி எரியும் தீயை தீயணைப்பு படையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரேனும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர் பட்டாசு ஆலை விபத்து சம்பவம்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழில் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால், அந்த மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பட்டாசு ஆலைகளில் திடீர் வெடி விபத்து ஏற்படுவதும், உயிர் இழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க: கோவையில் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை.. சக மாணவர்கள் 5 பேர் கைது.. அதிர்ச்சிகரமான பின்னணி!