பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!
Palani Sub Registrar Justin Manikandan : பழனி கோயில் நில முறைகேட்டில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனியார் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில், வழக்கறிஞர் அன்வர்தீன் உடல் நல குறைவு காரணமாக சிறையில் மரணமடைந்தார். சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சு வலிப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
சஸ்பெண்ட் சார் பதிவாளர் மீது புதிய வழக்கு
இது தொடர்பாக சார்பதிவாளர் ஈஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலமானது கோவிலுக்கு சொந்தமானது என்று தகவல் பரவிய நிலையில், தற்போது, தனியார் நிலம் என பதிவுத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சிவகாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் – முதியவர்களுக்கு நேர்ந்த கதி




சார் பதிவாளரை கைது செய்ய போலீசார் தீவிரம்
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜஸ்டின் மணிகண்டனிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக, அவரை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில், பழனி நிலம் முறைகேடு வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஜாமீன் ரத்து செய்த உயர்நீதிமன்றம்
இதில், நில முறைகேடு பத்திரப்பதிவில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கருதிய நீதிமன்றம் அவரது ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்